Tuesday, August 6, 2013

நான் வாசித்த நன்னூல்-3 குறிஞ்சி மலர்

   கடந்த பத்து மாதங்களுக்குள்ளாக நா.பார்த்தசாரதி அவர்களின் ‘’குறிஞ்சி மலர்’’ நாவலை இரண்டு முறை நுகர்ந்துவிட்டேன்(வாசித்துவிட்டேன்).கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் வைக்க முடியாது. எத்தனைமுறை வாசித்தாலும் ஒவ்வொருமுறையும் நமக்குள் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். வாசித்து முடித்து இரண்டு மூன்று நாட்களாவது நம்மை தூங்கவிடாமல் செய்துவிடும். இந்நாவலில் வரும் பூரணி-அரவிந்தன் போன்ற இலட்சியமிக்க இளைஞர்கள் தமிழ்ச் சமூகத்தில் காலந்தோறும் தோன்ற வேண்டும் என்பது இந்நாவலாசிரியனின் விருப்பம். அறுபதுகளிலும் அதன் பின்னரும் இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தன் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்றால் இந்நாவலின் வீரியத்தை தனியாக விளக்கத்தேவையில்லை.

  என்னுடைய வருத்தம் இன்றைய காலங்களில் இதுபோன்ற நாவல்கள் அதிகம் வருவதில்லையே என்பதுதான்.

  சென்ற வருடம் வெளிவந்த வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப்போர்’ முழுமையான நாவல்வடிவம் இல்லையென்றாலும் உரைநடை கலந்த நாவல் என்று சொல்லலாம். இந்நாவல் ஓரளவு இன்றைய பிரச்சனைகளைப் பற்றி பேசியது. எமிலி-சின்னப்பாண்டி இலட்சிய இளைஞர்களாக தெரிந்தார்கள். அக்கதாப்பாத்திரம் நம்முள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றாலும் பிடித்திருந்தது என்பது உண்மை. கவிஞர் வைரமுத்து இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்நாவலை குறிஞ்சி மலர் அளவுக்கு கட்டமைத்திருக்க முடியும்.

  என் ஆசையெல்லாம் குறைந்தது வருடத்திற்கு ஒன்றாவது ‘குறிஞ்சி மலர்’ போன்ற நாவல்கள் வரவேண்டும். என் போன்ற இளைய சமுதாயம் வாசிக்க வேண்டும். அதன்தாக்கத்தால் தமிழ் சமூகத்தில் இலட்சிய இளைஞர்கள் உருவாக வேண்டும் என்பதே. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற நாவலை படைக்கும் ஆற்றல் மூன்று படைப்பாளர்களுக்கு உண்டு. தமிழருவி மணியன், S.p. Udayakumar , இறையன்பு இவர்களே அந்த மூன்று படைப்பாளர்கள் ஆவர். இன்னும் சொல்லப்போனால் இந்த மூவரும் மிகப்பெரிய நாவல் ஒன்றும் படைக்கவில்லைதான். ஆனால் இவர்களால் மட்டுமே குறிஞ்சி மலர் போன்று நம் மண்,பண்பாடு,இன்றைய உலகச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதநாவல்களை படைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்படைப்பாளர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் என் கருத்தை வலியுறுத்துவேன்...

Friday, August 2, 2013

நான் வாசித்த நன்னூல்-2 / வாடாமல்லி-வாசம் வீசும் மல்லி


   இந்த வருடத்தில் குறைந்தது இருபத்தைந்து நல்ல தமிழ் நாவல்களையாவது வாசித்துவிட வேண்டும் என்ற முடிவில் சில நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.ஒரு நல்ல (சமுதாய)நாவல்,சிறுகதை என்பது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டால் அதன் அடி ஆழம்வரை சென்று அலசி எழுதப்படுவது, வாசித்து முடித்ததும் குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது நம்மை தூங்கவிடாமல் புரட்டிப்போடுவது, நம்மை ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டிருப்பதுபோல ஒரு உணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே நல்ல நாவலுக்கு இலக்கணமாக நான் வரையறுத்துக்கொண்டுள்ளேன். சுகம் ஊட்டும், சுவையூட்டும் எழுத்துக்களை நான் வாசிப்பதில்லை என்ற முடிவிலும் இருக்கிறேன்.

   மூன்றாம் பாலின(அரவாணிகள்) மக்களை போகப்பொருளாகவும், இழிநிலை மக்களாகவும் பார்க்கும் ஒரு கேடுகெட்ட சமூகத்தில்தான் இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. ஏதோ நாமெல்லாம்(ஆண்கள்,பெண்கள்) பரிசுத்தமானவர்களாகவும், மூன்றாம் பாலின மக்கள் மட்டும் இந்த உலகத்தில் தீண்டதகாதவர்களாகவும், வாழத்தகுதியற்றவர்களாகவும் நாம் அவர்களை மிக கேவலமாக நடத்துகிறோம். அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதில் மிகப்பெரும் பங்கு நமக்கும் நமது அரசாங்கத்திற்கும் உண்டு.

   மேற்கண்ட சிந்தணைகள் எனக்கு எழக்காரணம் இப்பொழுது நான் வாசித்து முடித்த சு.சமுத்திரம் அவர்களின் ‘’வாடாமல்லி’’ நாவல்தான். 80களில் வெளிவந்த இந்நாவல் மூன்றாம் பாலின மக்களின் வாழ்வை போகிறபோக்கில் எழுதாமல் மிக ஆழமாக சென்று அவர்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்.

   ’சுயம்பு’ என்னும் விவசாய குடுமபத்தைச் சார்ந்த இளைஞன் மிகக் கடினப்பட்டு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில் அவனுக்குள் இருக்கும் பெண் தன்மை வெளிப்பட்டு அதனால் அக்கல்லூரியில் அவன்படும் அவமானங்களால் கல்லூரிக்கு செல்ல மறுக்கிறான். அவனுடைய பெண் தன்மையால் அவனுடைய அக்காவின் திருமணமும் நின்று போய்விடுவதால் வீட்டில் உள்ளவர்கள் சுயம்புவை மிக கொடுரமான முறையில் அவனை அடித்து உதைக்கிறார்கள். பிறகு தன் வீட்டைவிட்டு வெளியேறி மூன்றாம் இன மக்களுடன் இணைந்துகொள்வது, அங்கு காவலர்களால் அம்மக்களை கொடுமைப்படுத்துவது, பிறகு அங்கிருந்து தப்பித்து டெல்லிக்குச் சென்று அவன் இந்த சமூகத்தில் போடும் எதிர் நீச்சல்களும் சவால்களுதான் கதை.

   மருத்துவமாணவன் டேவிட் மூலம் அரவாணிகளைப் பற்றி ’’அவர்கள்(அரவாணிகள்) நம்மிடையே சமநிலை ஏற்படுத்த வந்தவர்கள்’’ என்று விளக்கம் கொடுப்பார் பாருங்கள் அது இக்காவியத்தின் உச்சம்.

   நான் ஏற்கனவே சொன்னது போல போகிறபோக்கில் எழுதாமல் மிகவிரிவான களஆய்வு செய்து இக்காவியத்தை படைத்துள்ளார் எழுத்தாளர் சு.சமுத்திரம். இந்நாவலைப் படித்துமுடித்ததும் ஒரு உண்மை மட்டும் விளங்கிற்று. 80களில் அவர்களை இச்சமூகம் எப்படி நடத்தியதோ அதேபோலத்தான் 2013லும் நடத்திக்கொண்டிருகின்றது. கடுகளவுக் கூட அவர்கள் குறித்த நம் பார்வையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

   என்னைப்பொறுத்தவரையில் சு.சமுத்திரம் அவர்களின் ’வேரிலே பழுத்தபலா’-விற்கு சாகித்திய அகதாமி விருது கொடுத்ததற்குப் பதில் ‘’வாடாமல்லி’’-க்கு கொடுத்திருக்கலாம்.

   சு.சமுத்திரம் அவர்களே நீங்கள் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி வணங்குகிறேன்...

Sunday, May 19, 2013

போலச்செய்தல்...



     இன்றைய யுவன்,யுவதிகளில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் பேண்டை அணிந்துகொண்டு நடப்பதை பெருநகரங்களில் சர்வசாதாரணமாக காணமுடிகிறது.(கிராமங்களும் இதற்கு விதிவிலக்கல்ல). அதுவும் இந்த மே மாத கடுமையான வெயிலிலும் ஜீன்ஸ் அணிவது கொடுமையிலும் கொடுமை. நமது நாடு (மித) வெப்ப மண்டல நாடு. இங்கு பெரும்பாலும் ஆறுமாதங்களாவது கடுமையான வெப்பம் நிலவுகிறது. மேமாத வெய்யிலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இச்சூழ்நிலைக்கு ஏற்றது கதர் போன்ற வெப்பம் தாக்காத அல்லது வெப்பத்தை தாங்கக்கூடிய ஆடைதானே தவிர ஜீன்ஸ் அல்ல. வெப்ப நாட்களில் ஜீன்ஸ் அணிவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணராமல் இருக்கமுடியாது. அப்படியிருந்தும் ஏன் எதையும் சுய உணர்வுடன் சிந்தித்து செய்லபடாமல் ஆங்கிலேயர்களைப்பார்த்து போலச் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை?

   நம் உடலுக்கு எது ஏற்றது? எது சிறந்தது? என்ற சுய அறிவுகூட இவர்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. இதில் பெரும்பாலானோர் மெத்தப்படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. எல்லோரும் ஆங்கிலேயர்களின் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் உடைவிஷ்யத்தில் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள். வெப்ப நாட்களில் மென்மையான ஆடைகளையும், குளிர் நாட்களில் அதற்கேற்ற உடைகளையும் என்று பகுத்துணர்ந்து அணிகிறார்கள். ஆனால் நாம் அவர்கள் எதை செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணைமூடிக்கொண்டு காப்பியடித்து நாம் செய்வது சரியா,தவறா என்றுகூட சிந்திக்காமல் போலச்செய்து கொண்டிருக்கிறோம்.

   நான் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி அணியுங்கள், புடவையை உடுத்துங்கள் என்று கூறவில்லை. (அப்படி வேட்டி,புடவை அணிவதில் எந்த தவறும் இல்லை என்பது வேறுவிஷயம்). அதோடுமில்லாமல் நான் ஜீன்ஸ் பேண்ட்க்கு எதிரானவளும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் நானும் என்னவனும் ஜீன்ஸ் பேண்ட்,டி-சர்ட் அணிபவர்கள்தான். ஆனால் கண்டிப்பாக இதுபோன்ற கோடை நாட்களில் அணியாமல் குளிர் மற்றும் மழைக்காலங்களில் மட்டுமே அணிவோம்.

    உடை விஷயத்தில்தான் இப்படியென்றால் உணவு விஷயத்தில் இன்னும் மோசம். இப்படி ஒவ்வொன்றிலும் மேலை நாட்டினரைப்பார்த்து போலச்செய்துகொண்டிருந்தால் நம் பாரம்பரியங்களை மட்டுமல்ல சுயத்தையும் இழந்து மலடாகி நிற்போம் என்பதே உண்மை.

Saturday, May 18, 2013

தாய்மொழிவழிக்கல்வி-3


கல்விச்சாலை என்னும் சிறைச்சாலை!

  இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிய உடனே Pre.K.G-யில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மா,அப்பாவின் கதகதப்பில் இருக்கவேண்டிய குழந்தைகள் இரண்டரைவயதிலேயே அவனை/அவளை பெரிய அறிவாளியாக்கித்தீருவேன் என்று கங்கணம்கட்டிக்கொண்டு குழந்தைகளை படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவிடமும் அப்பாவிடமும் தாத்தா,பாட்டியிடமும் கொஞ்சிவிளையாடிமகிழவேண்டிய குழந்தைகள் கல்விக்கூடம் என்னும் சிறைச்சாலையில் மாட்டிக்கொண்டு தவியாய்தவிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுவதில்லை. இதுபோன்ற பெற்றோர்களைப்பார்த்து ஒரு கேள்விகேட்கவிரும்புகிறேன்: இரண்டரைவயது நிரம்பிய ஒருகுழந்தைக்கு கல்வி என்னவேண்டிக்கிடக்கிறது.? அவர்களுக்கு விளையாட்டல்லவா முக்கியம்.பெரும்பாலான மேலைநாடுகளில் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளியில் சேர்க்கிறார்கள்.

  பெரும்பாலன பெற்றோர்கள் புலம்புவது அவன்/அவள் கேள்விமேல் கேள்விகேட்டு எங்க உயிர எடுக்கறான். இங்கு இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போய்தொலையட்டும் என்பார்கள். குழந்தையென்றால் குழந்தையாகத்தான் இருக்கும். அங்குமிங்கு ஓடும்,அது என்ன?இது என்ன? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கத்தான் செய்யும். அப்படியிருந்தால்தான் அது குழந்தையாக இருக்கிறது என்று அர்த்தம். அதைவிடுத்து, அதை தொடாதே, இதைதொடாதே என்று அவர்களை ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்கார் என்றால் ஒருகுழந்தையால் எப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக உட்காரமுடியும்? சரி, நம்மையே எடுத்துக்கொள்வோம், நாமே ஒரு மணிநேரம் எந்த செயலும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டியிருப்போமா? அப்படியிருந்தால் நமக்கே பைத்தியம் பிடித்துவிடுவதுபோல் இருக்கும். அப்படியிருக்கும்போது குழந்தைகளுக்கு?

  உங்கள் குழந்தைகளை தாத்தா,பாட்டியிடம்(அது பக்கத்துவீட்டு தாத்தா,பாட்டியாககூட இருக்கலாம்)விடுங்கள். நல்ல நீதிக்கதைகளை சொல்லிவளரப்பார்கள்.இப்படி வளரும் குழந்தைகள் நல்ல ஒழுக்கபண்புள்ள மனிதர்களாக பிற்காலத்தில் திகழ்வார்கள்.

  சரி,வீட்டில் பெற்றோர்தான் இப்படியென்றால் கான்வெண்ட்கள் பெற்றோர்களைவிட கொடுமையாக இருக்கிறது. இந்த பிஞ்சு குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று தெரிவதில்லை. இந்தவயதிலேயே ரேங்க் போட்டு அவர்களில் நீ அறிவாளி, நான் முட்டாள் என்று பேதத்தை உருவாக்குகிறார்கள்.

  உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள், இன்று எத்தனை குழந்தைகள் நான் பள்ளிக்குப்போகிறேன் என்று அவர்களாகவே முன்வந்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள்? அந்தளவு நரகமாக உள்ளது நமது கல்விச்சாலைகள்.(ஒருசில விதிவிலக்கு பள்ளிக்கூடங்கள் உள்ளன என்பது ஆறுதல்தரும் விஷயம்).

  குழந்தைகளை விளையாடும்போது நீங்கள் கவனித்தால் ஒன்று தெரியும், அவர்கள் ஆசிரியர்,மாணவர்கள் விளையாட்டு விளையாடுவார்கள்.அதில் நான்தான் டீச்சரா இருப்பேன்னு சொல்லி ஓடிப்போய் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆசிரியர் என்றாலே கையில் பிரம்புடன்தான், இருப்பார்கள், குழந்தைகளை அடிப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை நமது பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள்.

   இந்த சூழ்நிலைகளையெல்லாம் நாங்கள் கவனித்ததால்தான் நாங்கள் ஒருமுடிவெடுத்துள்ளோம் எங்கள் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும்,ஐந்தாம் வகுப்புவரையில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும், அதெற்கு மேல் நாங்கள் வீட்டிலேயே அவர்களை படிக்க வைக்கலாமென்றும் முடிவெடுத்துள்ளோம்.எங்களின் முடிவு உங்களுக்கு பைத்தியகரமானதாக இருக்கலாம். ஆனால் இதோ கீழே உள்ள தொடர்பில் சென்று படித்துப்பாருங்கள் ஒரு தகப்பன் எப்படி தன்குழந்தைகளை வள்ர்க்கிறார்? எப்படி வளர்க்கவேண்டுமென்பது உங்களுக்கே புரியும்.இதைப்படித்தபிறகு நிச்சயம் நீங்களும் எங்கள் வழியைப்பின்பற்றுவீர்கள்.

http://writersamas.blogspot.in/2010/11/45e.html

தமிழ் வழிக்கல்வி-2


  ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழியில்தான் படிக்கவேண்டுமென்பது உலகின் மிகப்பெரிய அபத்தம். அன்று பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும், அதனால் பாரதி என்ன ஏழு மீடியத்திலுமா படித்திருப்பார். பாவாணர் அவர்களுக்கு என்பத்தி இரண்டு மொழி தெரியும், அதனால் பாவாணர் என்ன 82 மீடியத்திலுமா படித்திருப்பார்.

  இங்கு பெரும்பாலனவர்களுக்கு மொழிக்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆங்கிலத்தை ஒருமொழியாக நினைக்காமல் அதை அறிவாக நினைக்கிறார்கள். அதனால்தான் ஆங்கிலத்தின் மீது இவ்வளவு மோகம்.அதுமட்டுமல்ல நம்பள்ளிகள் ஆங்கிலத்தை மொழியாக போதிக்காமல் அறிவாக போதிக்கிறார்கள்.

  ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்நாளில் எவ்வளவு மொழியைக்கற்றுக்கொள்கிறானோ அந்தளவிற்கு அவன் அறிவு விரிவடையும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி கற்றுக்கொள்வதிலும் எந்த தவறுமில்லை.ஆனால் தன் தாய்மொழியை மறுதலித்துவிட்டு அயல்மொழியை கொண்டாடுவது வெட்கக்கேடானது.ஆகையால்தான் எங்கள் குழந்தைகளை தாய்மொழிவழிக்கல்வியில் பயிலவேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இன்னும் பேசுவேன்...

தமிழ் வழிக்கல்வி-1


   இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்கவைக்கலாம் என்பதே பேச்சாக இருக்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்கள்கூட எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்கவைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதுவும் சமச்சீர் கல்வி வந்தவுடன் பெருநகரங்களில் சி.பி.எஸ்.ஸி-யில் படிக்கவைக்கலாமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  இன்று என்னவருடன் எங்கள் எதிர்காலதிட்டங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். வருங்காலத்தில் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்கலாமென்றும் அதுவும் தமிழ்வழியிலேயே படிக்கவைக்கலாமென்றும் முடிவு எடுத்துள்ளோம். ஆம் இது ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுத்தமுடிவல்ல. நம்மைச்சுற்றி இருக்கும் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், எந்த மீடியத்தில் படித்தாலும் நாம் நம் குழந்தைகளை கண்டிப்பாக தமிழ் வழியிலேயே படிக்க வைக்கவேண்டும் என் முடிவாக இருக்கிறோம்.

  காரணம் எந்த குழந்தையும் தன் தாய்வழியில் படிக்கும்போதே அவர்களின் புரிதல் மேனமையடைகின்றது. அவர்களின் பார்வை விசாலமடைகின்றன. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றன. இன்று பல சாதனையாளர்கள் தாய்மொழிவழியில் படித்தவர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நமது அறிவியல் விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தான் போகும் இடம்மெல்லாம் நான் தமிழ்வழியில் படித்ததால்தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். நான் சாதித்தமைக்கு என்தாய்மொழிவழி கல்வியே காரணம் என்று நம் தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றுகிறார். கண்டிப்பாக நாங்களும் அப்படி ஒரு சாதனையாளர்களை உருவாக்கி காட்டுவோம்!.

இன்னும் இதைப்பற்றி தொடர்ந்துபேசுவேன்...

Saturday, May 11, 2013

மனிப்பூரில் ஒரு சகாயம்!


            நாம் கற்ற கல்வியால் இந்த மானுடத்திற்கு பயன் இருக்குமேயானால் அதுதான் சரியான கல்வி. ஆனால் இங்கு பெரும்பாலும் நம் வயித்துபாட்டுக்காகவே படிக்கிறோம். அதுபோல ஒருவர் ஒருபதவியில் இருக்கிறார் என்றால் அந்த பதவியினால் அந்த சமூகத்திற்கும்,எளிய மனிதர்களுக்கும் பயன் இருக்குமேயானால் அப்பொழுதுதான் அந்தப்பதவிக்கும்,அப்பதவில் இருப்பவர்க்கும் பெருமை.ஆனால் இன்று பெரும்பாலான ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகள் தன் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகளின் முதுகைச்சொறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும் ஒரு சிலர் மக்கள் நலனுக்காக உழைப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

   தமிழ்நாட்டில் எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஆனால் நம் நினைவிற்கு வருபவர்கள் சகாயம்,இறையன்பு,அன்சுல் மிஸ்ரா என்று ஒருசிலரே.காரணம் இவர்கள் அந்தப்பதவியில் அமர்ந்தப்பிறகு அவர்கள் மக்களுக்காகச் செய்த சேவைதான் அவர்களை நம் நினைவில் நிற்கச்செய்கின்றது.

    சில மாதங்களுக்கு முன்னால் ஒரு sociologist சொன்ன கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். அதாவது அடிமட்டத்திலிருந்து(SC/St போன்றோர்)உயர் பதவிக்கு வருபவர்கள்தான் பெரும்பாலும் லஞ்சத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார். இந்தியா முழுக்கவே அவருக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஆனால் RBI(Reserve Bank of India)யின் துணைகவர்னர் திரு.சக்கரவர்த்தி அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். அதாவது பெரிய பதவிகளுக்கெல்லாம் பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து படித்துவிட்டு வருபவர்களை அமர்த்த வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப அவர்களால் திட்டங்களை வகுக்க முடியும் என்றார். இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். இவரின் கூற்றுக்கு உதாரணங்கள்தான் இறையன்பு,சகாயம் இன்னும் இன்னும் சிலர் இருக்கிறார்கள். 

    அந்த வகையில் சமீபத்திய ஓர் உதாரணம் Armstrong Pame I.A.S.(28). இவர் ஏழு சகோதரிகள்(Seven Sisters) என்று வருணிக்கக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மனிப்பூர் மாநிலத்தின், Tousem பகுதியில் Sub-divisional magistrate பதவியில் இருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அதோடுமில்லாமல் நாகலாந்து மாநிலத்தின் Zeme என்னும் மலைவாழ் இனத்திலிருந்து வந்திருக்கும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.

      நமது அரசாங்கம் செய்திருக்க வேண்டிய செயலை தனிமனிதனாக(மக்கள் ஒத்துழைப்புடன்)சாதித்திருக்கிறார்.இவரை அந்த பகுதி மக்கள் ’அதிசய மனிதன்’ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இவர் என்று கேட்கிறீர்களா? ஆம், மக்களுக்கு நல்ல சாலை வசதியை ஏற்படுத்திகொடுத்திருக்கிறார். இவர் அந்த திட்டத்திற்கு’’மக்கள் பாதை’’(People's Road) என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். அட!? ரோடுபோட்டதுலாம் ஒரு சாதனையா? எங்க ஊர் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்கூடதான் எங்களுக்கு ரோடுபோட்டுகொடுத்திருக்கிறார்கள் என்று அங்கலாய்க்காதீர்கள். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் போடுவது மக்களுக்காக அல்ல, தங்களின் வசதிவாய்ப்பை பெருக்கிக்கொள்வதற்காக. ஆனால் Armstrong Pame I.A.S. செய்துகொடுத்திருக்கும் சாலைவசதி மலைவாழ் மக்களுக்காக.அதுவும் மிகமிகக் கடினமான மலைப்பகுதியில்.

     2012ஆம் ஆண்டு Tousem மாவட்டத்தின் Sub-divisional magistrate பதவிக்கு வந்தபிறகு பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அம்மக்களின் வாழ்க்கை முறையினைப் பார்த்திருக்கிறார். அம்மக்கள் அரிசி வாங்கி முதுகில் சுமந்துகொண்டு பலகிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல், ஒரு நோயாளியை மருத்துவமணைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமானால்கூட மூங்கிலாலான ஒரு தட்டியில்தான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். இதுபோன்ற மிகக்கடுமையான சூழ்நிலையை பார்த்த அவர் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள் ஒரே குரலாக எங்களுக்கு நல்ல சாலைவசதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சரி என்று இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அரசோ அங்கு சாலைபோடுவதற்கான சூழ்நிலை துளிகூட இல்லையென்று கூறி சாலைபோட மறுத்துவிட்டது. இருந்தும் இவர் சோர்ந்து போய்விடவில்லை. தனது சொந்த பணம் ஐந்து லட்சத்தை முதல்முதலாக இந்த திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கிறார். அவரது சகோதரர்(டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) ரூபாய் ஒருலட்சமும், அவரது அம்மா (இவரின் அப்பா ஓய்வூதியத்திலிருந்து) ஐயாயிரமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை அப்படியே அவருடைய முகனூலில் போட்டிருக்கிறார். இதைப்பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் 2500 டாலரும்,மற்றொருவர்3000டாலரும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியாக 40லட்சம் சேர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த 40லட்சம் மிகச்சிறிய தொகையாகவே இருந்திருக்கிறது. சாலைபோடும் உள்ளூர் Contractors சில இயந்திரங்களை இலவசமாக கொடுத்து உதவியிருக்கிறார்கள். அந்தப் பகுதிமக்களும் கூலிவாங்காமல் வேலைசெய்திருக்கிறார்கள். இப்படியாக அந்தபகுதி மக்களுக்கு 100கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைத்துகொடுத்திருக்கிறார்.

     ’உண்மையில் இதை என்னால் நம்பவே முடியவில்லை, இது ஒரு அதிசயம், மீண்டும் என்னால் இப்படி ஒருசெயலை செய்ய முடியுமா என்று தெரியவில்லை’ என்று நெகிழ்கிறார் திரு.Armstrong Pame I.A.S.

      அந்தப் பகுதிவிவசாயிகளும் இந்த ’மக்கள் சாலை’ வந்தபிறகு எங்களாலும் நாலுகாசு சம்பாதிக்கமுடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

     ’ரோடுபோட்டது போதும் முதலில் உனக்குன்னு ஒரு வீடு கட்டு’ என்று இவரின் அம்மா கூறுகிறாராம்... 

    நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்வேன் மகத்தான சாதனைகளும், மக்களுக்கான பயனுள்ள திட்டங்களும் இதுபோன்ற எளிய மனிதர்களாலேயே சாத்தியமாகின்றன.