Friday, December 7, 2012

கிராமங்களை நோக்கி திரும்புவோம்...




   இக்கட்டுரைக்குள் நுழைவதற்குமுன் முதலில் விவசாயத்திற்கும் எனக்குமான தொடர்பை நான் உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். நான் முழு நேரம் விவசாயம் பார்ப்பவள் இல்லையென்றாலும் என் பாட்டி வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடத்தவறியதில்லை. அங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஓரளவு அறிந்தவள். இப்பொழுதும் எங்களுக்குள்ள எட்டு ஏக்கர் நிலத்தில் அவ்வப்போது நான் பகுதி நேர விவசாயம் செய்து வருகிறேன். தொடர்ந்து விவசாயம் தொடர்பான புத்தகங்களைப் படித்து வருகிறேன். அத்துடன் இல்லாமல் என் விவசாயம் சார்ந்த  நண்பர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூறிய கருத்துக்களையும் இதில் எழுதி உள்ளேன். அதே போல் விவசாயம் எப்படி இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்தால் விவசாயத்தின் மூலம் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு வருகிறேன். என்னுடைய நோக்கம் அனைத்து கிராமங்களையும் சுயசார்புடைய கிராமங்களாக உருவாக்க வேண்டும்.அதாவது நகரத்தை நோக்கி ஓடாமல் நம் கிராமத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நகரத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு கிராமமும் பெறவேண்டும். நல்ல பசுமையான கிராமத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் முழு நேர விவசாயத்தில் ஈடுபடவும் இருக்கிறேன். ஆகையால் நான் ஏதோ போகிறபோக்கில் இக்கட்டுரை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.


    இனி கட்டுரைக்குள் செல்வோம்.இது விவசாய நாடு,இந்தியா கிராமத்தில் வாழ்கிறது,கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள் என்ற பழைய பல்லவியே நானும் பாட விரும்பவில்லை. மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பைக் கண்டு பிடித்து சமைத்து உண்ணத் தொடங்கியதிலிருந்து இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது விவசாயம்தான்.முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவள் ஒரு பெண்தான்.ஆம்  முதலில் ஆணும் பெண்ணும் உணவுக்காக வேட்டையாட இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒரு கட்டத்தில் ஆண் மட்டும் வேட்டையாட கிளம்பினான்.பிறகு தனிமையில் இருந்த பெண் சும்மா இருக்க பிடிக்காமல் விதை போல் இருந்த ஒன்றை பூமியில் ஊன்றிவைத்தால்,ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அது விளைந்து நின்றது.இப்படித்தான் விவசாயத்தை பெண் நமக்கு அறிமுகப்படுத்தினால். பிறகு மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தது எல்லாமே ஆத்தங்கரை ஓரத்தில்தான்.காரணம் பயிர் செய்வதற்கு ஏதுவான நீரும் நல்ல மண்வளமும்  இங்கு அமைந்ததால். ஆகையால் நகரங்கள் ஆற்றங்கரையோரமே அமைந்தன. இப்படி மனித சமுதாயம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கு காரணமே விவசாயம்தான்.

  ஆனால் இன்று இந்த விவசாயமும் விவசாயிகளின் நிலையும் எந்த அவலட்சனத்தில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. இந்த தேசத்தில்தான் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு  தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்கம் காலங்காலமாக உழைத்துக்கொண்டும் முதலாளி வர்கம் பாடுபடாமல் சொகுசான மகிழுந்தில் பயனித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.நான் இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கம்யூனிசம் பேச வரவில்லை.ஆனால் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகள் வேண்டும் என்றே கேட்கின்றேன்.

    தேசத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இன்றைய ஊடகங்கள் கொஞ்சம் கூட ஊடக தர்மம் இல்லாமல் செயல் படுகின்றன.’’எழுத்தும் தெய்வம்,எழுதுகோல் தெயவம்’’ என்றானே மகாக்கவி பாரதி அதை மறந்து ஊடகங்கள் செயல்படும் விதம் மிகக் கேவலமாக உள்ளது.சினிமாவையும் கிரிகெட் போன்ற கேளிக்கையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் நூற்றிருபது கோடிப்பேருக்கு சோறுபோடும் விவசாயிகளைப் பற்றி கொஞ்சளவேனும்  எழுதுகிறார்களா?பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை அனைத்து மீடியாக்களும் போக்கஸ் செய்து கொண்டிருந்த அதேவேலையில் ,அதற்கு பக்கத்திலேயே விதர்பா பகுதியில் விவசாயத்தற்கொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதை ஒரு ஊடகமும் கண்டுக்கொள்ளவில்லை. அந்த அவல நிலை குறித்து ஒரு ஊடகமும் எழுதவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் பெட்டி செய்தியாக போட்டுவிட்டு போகிறார்கள். ‘விவசாயம் நிறைந்த ஒரு நாட்டில் வறுமை சூழ்ந்த ஒரு நாட்டில் சினிமாவும்,கிரிக்கெட்டும் தேவையா (இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா)’என்று நான் கேட்கவில்லை,உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி, இப்போதைய Press Council of India Chairman உயர்திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள் கேட்கிறார்.மீடியா சீர்திருத்தம் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.

 
    தமிழனின் உழைப்பை பறைசாற்றும் உழவர்திரு நாளாம் பொங்கல் நாளன்றுகூட நம் வீட்டு டி.வி பெட்டியிலும் செய்திதாள்களிலும் சினிமாகாரர்கள்தானே ஆக்கிரமிக்கிரார்கள்.அனுஷ்காவின் அன்றாட நாட்குறிப்பு தொடங்கி இந்த பொங்கலுக்காவது ரஜினி படம் வருமா வராதா?என்று சினிமாகாரர்களை போட்டுபோட்டே நம்மை சிந்திக்க வைக்கவிடுவதில்லை இந்த தொலைக்காட்சியும் பத்திரிக்கைகளும். நம் விவசாயிகளின் தினத்தில் ஏன் இவர்கள் வந்து நம்மை ஆக்கிரமிப்பது. இந்த தினத்தில்  ஒரு விவசாயியையாவது அழைத்து வந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கூட தோன்ற வில்லையா நம் ஊடகங்களுக்கு.இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே விவசாய சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. பொதிகை கொஞ்சம் பங்கு கொள்கிறது.

  இங்கு இருபத்தி நான்குமணி நேரத்திற்கும் காமெடிக்கு என்று பல சேனல்கள், பாடல்களுக்கு என்று பல சேனல்கள், விளையாட்டுக்கு என்று பல சேனல்கள். ஆனால் எழுபது சதவீதம் பேர் வேலை செய்யும் விவசாயத்திற்கென்று ஒரு சேனல்கள் உண்டா? ஏன் இந்த அவலநிலை? இந்த தேசம் சரியான பாதையில் பயணிக்கின்றதா?

 ஊடகம்தான் இப்படி என்றால் நம்மால் நமக்காக தேர்ந்தெடுத்த அரசும் அரசியல் வாதிகளும் ஊடகங்களைவிட மோசமாக செயல்படுகிறார்கள்.விவசாயமே துளிகூட தெரிந்திடாத கொஞ்சம் கூட வியர்வை சிந்தி உழைக்காத ஒருவர்தான் இங்கு விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் அவல நிலை.இவர் எப்படி நமக்கு ஏற்ற சட்டங்கள் போடுவார்?விவசாயிகளின் பிரச்சனை இவருக்கு எப்படி தெரியும்?இதுவரை ஒரு விவசாயி கூட ஒரு ராஜசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கவில்லை.அதற்குள் சச்சின் இடம் பிடித்துவிட்டாரே. இப்பொழுது அவருக்கு பாரத ரத்னா கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசியல் நடந்து கொண்டிருக்க நம் இளைஞர்கள் சிலர் இதற்கு வக்காலத்து வாங்குவது மிகப்பெரிய கொடுமை.

இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் டாஸ்மாக், சினிமா, கிரிகெட் என்று இந்த வட்டத்திற்குள்ளே சுழலுகின்றனர்.கேட்டால் தினமும் உழைக்கின்றோம் ஒருநாள் ஓய்வு என்கிறார்கள். நான் இவர்களைப்பார்த்து தெரிந்தே ஒரு கேள்வி கேட்கிறேன்.நீங்கள் வாழும் இதே சமூகத்தில்தானே  சினிமாவே கண்டிராத எத்தனையோ பேர் இன்னும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேலை உணவில்லாமல் பசியால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கேளிக்கைகள் தேவைப்படலாம்.ஆனால் பட்டினிச்சாவு நடந்து கொண்டிருக்கும் நம் சமுகத்திற்கு தேவையானதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

   இப்படியாக எங்கெங்கு காணினும் விவசாயி நசுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறான்.விவசாய குடும்பத்திலிருந்து வந்த நம் வீட்டு படித்த இளைஞர்கள் நகரத்தில் தகுதிக்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த பொறியியல் படித்த எத்தனையோ இளைஞர்கள் பத்தாம் வகுப்பு படித்து செய்யக் கூடிய ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்ள்.அப்படியென்றால் விவசாயக் குடும்பத்திலிருந்து பொறியியயல் படித்துவிட்டு நம் இளைஞர்கள்/இளைஞிகள் தனியார் நிறுவனத்திற்கு சென்று வேலை பார்க்கக் கூடாதா?அப்படியென்றால் அவர்கள் பெற்றோர்கள் செய்த விவசாயத்தையே இவர்களும் செய்ய வேண்டுமா? இது குலத்தொழில் போலல்லவா இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

  இவ்வளவு அவலநிலைகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்துகொண்டிருக்கும் நம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மிகக கொடுமையானது.முதலில் சரியான மின்சாரம் இல்லை, விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை,அதையும் மீறி இராப்பகல் பாரமல் பயிர்செய்து உற்பத்தி செய்துகொண்டு போனால் நியாயமான விலைக்கு கேட்பதில்லை.இது போன்ற இல்லைகளே அதிகம்.

  சரி அனைவரும் புறந்தள்ளும் விவசாயத்தில், இவ்வளவு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள விவசாயத்தில் எப்படிதான் லாபகரமான விவசாயியாக உருவெடுப்பது? இதற்கு நம் இளைஞர்கள்/இளைஞிகள் என்ன செய்ய வேண்டும்? சுயசார்புடைய கிராமங்களை உருவாக்குவது எப்படி?

தொடரும்...

Tuesday, December 4, 2012

தொடர் : இலக்கிய ஆளுமைகள்-2

தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'

-மு.பரமசிவம்



  மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 ÷கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 ÷தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 ÷÷பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 ÷உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 ÷நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ÷""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 ÷1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 ÷இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 ÷"பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ÷ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 ÷புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 ÷2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!

  தினமணி ’தமிழ்மணியில்’ வெளிவந்த பல்வேறு இலக்கிய ஆளுமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் என்னால் தொகுக்கப்படும் கட்டுரையாகும்.

முதல் கட்டுரையைப் படிக்க :  இலக்கிய ஆளுமைகள்-1

Friday, November 30, 2012

ஆயிஷா...



இன்று ஆயிஷா என்னும் அற்புதமான குறும்படம் பார்த்தேன்.ஆனால் இது குறும்பட விமர்சனம் அல்ல. நான் அதிகமாக படங்களையும் பார்ப்பவள் அல்ல.அதுமட்டுமில்லாமல் திரைவிமர்சனம் மட்டும் என் வலைப்பூவில் எழுதி என் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற முடிவிலும் இருக்கிறேன். அதற்காக நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன.ஆனால் இந்த படம் பார்த்தப் பிறகு என் மனதில் தோன்றியதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆகையால் இதை குறும்பட விமர்சனமாக நினைக்காமல் என் மனதில் தோன்றிய வலிகளையும், ஆதகங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதாக நினையுங்கள்.

  ’’ஆயிஷா’’ சில வருடங்களுக்கு முன்னால் நான் புத்தகமாகப் படித்து தூக்கத்தைத் துளைத்ததுண்டு. இரா.நடராசன் அவர்கள் எழுதிய குறுநாவல். மீண்டும் இப்பொழுது குறும்படமாக பார்த்தப் பிறகு என் வேதனையையும் ஆதங்கத்தையும் அடக்க முடியவில்லை. யார் மீது வேதனை? யவர் மீது ஆதங்கம் என்று கேட்கிறீர்களா? எல்லாம் நமது இந்தியக் கல்வித்துறையின் மீதுதான். ஆங்கிலேயர்கள் நம்மை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதர்க்காகவும் முட்டால்களாக இருக்கச்செய்யவுமே மெக்காலே என்பவரால் கொண்டுவரப்பட்ட கல்விமுறைதான் இப்பொழுது இருக்கும் நம் கல்விமுறை. ஆங்கிலேயர்கள் சென்று அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நாம் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் 2020-ல் வல்லரசு, அடுத்த சூப்பர் பவர் என்று கூப்பாடு போடுகிறது நம் அரசு.

  இந்த குறும்படம் ’ஆயிஷா’ என்னும் ஏழாம் வகுப்பு மாணவி மூலம் நம் கல்வி அமைப்பைச்(Educational System) சாடுகிறது. எனக்குத்தெரிந்து ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஆயிஷாதான். நமது கல்விமுறையும் ஆசிரியர்களுமே ஆயிஷா உருவாவதை தடுக்கிறார்கள். எந்தக்குழந்தை(மாணவர்கள்) கேள்விகேட்டாலும் அக்குழந்தையை ஊக்கப்படுத்தி (குறைந்த பட்சம் பதிலாவது சொல்லலாம்)ஆராச்சியில் ஈடுபடமளவுக்கு தூண்டவேண்டும். ஆனால் பாவம் இங்கு என்ன செய்வது ஆசிரியர்களுக்கே விடை தெரிவதில்லை. இதில் எங்கே ஆராய்ச்சி? நம் படத்தின் நாயகி ஆயிஷா ஆசிரியர்களை கேள்விமேல் கேள்வி கேட்கிறாள். அவள் அறிவுப்பசியில் ஆசிரியர்களே அறியாத(அறிந்துக் கொள்ள விருப்பமில்லாத)ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தேடித்தேடிப்  படிக்கிறாள்.  இப்புத்தகங்கள் ஏன் தமிழில் இல்லை என்று வேதனைப்படுகிறார்கள். நீங்களே(ஆசிரியர்களே)ஏன் தமிழில் எழுதக்கூடாது? என் போன்ற மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று பாரதி சொன்னானே ’’பிறமொழியில் உள்ள நல்ல புத்தகங்களையெல்லாம் தமிழில் படைத்திட வேண்டும்’’ என்று அதை இங்கு நமக்கு நினைவூட்டுகிறாள்.அவளின் அறிவுத் தேடுதல் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. அவள் ஆசிரியர் அடித்தாள் வலி தெரியாமல் இருக்க ஏதாவது மருந்து இருக்கிறதா என்னும் போது நம் கண்களில் கண்ணீர் வரவைப்பதோடுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்துகிறாள்.

   இந்தக் குறும்படம் இத்துடன் நின்று விடவில்லை. ம்ற்றுமொரு உண்மையையும் சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது நம் கிராமத்தில் இன்னும் இருக்கும் வழக்கம். பெண்பிள்ளையை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும். அவள் இன்னோர் வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே. அவள் அடுப்படிக்கும், கணவனுக்கு பணிவிடை செய்யவும் பிறந்தவள்தானே, பிறகு இவளை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்னும் கிராமத்துப் பெற்றோர்களின் மனோநிலையை அல்லது அறியாமையை விளக்குகிறது. ’ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கே பயன்’ என்னும் உண்மையை ஏன் நம் பெற்றோகள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்னும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.

 
  இங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும். ’ஆசிரியர் என்பது அறப்பணி,அதற்கே உன்னை அற்பணி’ என்பது மூத்தோர் சொல்’. அதுமட்டுமில்லாமல் ’எழுத்து அறிவித்தவன் இறைவன் என்று சொவார்கள்’. அந்த அளவிற்கு ஆசிரியர்களை கடவுளாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால் ஆசிரியர்கள் வேலைக்கு வந்த உடன் படிப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்(ஒரு சில ஆசிரியர்களைத் தவிர). ஆசிரியர்கள் இதை ஒரு வேலையாகத்தான் பார்க்கிறார்கள். இதை தவமாகப் பார்ப்பதில்லை. தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிரும்புவதில்லை. ஓர் ஆசிரியர் என்பவர் அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச அறிவுடனாவது இருக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விடுகிறார்கள்.  நான் அறிவியல் ஆசிரியர்தானே பிறகு நான் ஏன் கணிதம் கற்கவேண்டும்?,நான் ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். இவர்கள் மாணவர்களை விட படிப்பதற்கு சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பிறகு இவர்கள் போய் எங்கு ஆசிரியர் பணியை அறப்பணியாக நினைக்கப் போகிறார்கள்.

       இப்பொழுது தமிழக அரசு கொண்டுவந்துள்ள ’ஆசிரியர் தகுதித்தேர்வு திட்டம்’ பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.அப்பொழுது புரியும் ஆசிரியர்களின் நிலமை.

  மீண்டும் இக்குறும் படத்திற்கு வருவோம். இப்படத்தில் ஒளிப்பதிவு சரியாக அமையவில்லை. அதாவது முழுவதும் இரவில் படபிடிப்பு நடந்தது போலவே தெரிகிறது. மற்றபடி சிறு தொய்வு கூட இல்லை. இயல்பாக இருக்கிறது. ஆசிரியையும், ஆயிஷாவும் மிகச் சிறப்பாகவே நடித்துள்ளனர். அற்புதமான இயக்கம். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரா.நடராசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

   அனைவரும் குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவசியம் இக்குறும்படத்தைப் பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் பார்க்க வையுங்கள். இனிமேலாவது குழந்தைகளை மதிப்பெண்களுக்காக படிக்க வைக்காமல் விஷயத்தைத் தெரிந்துக்கொள்வதற்காக படிக்க வையுங்கள். பாடபுத்தகத்தை தாண்டியும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். குழந்தைகள் கேள்விகள் கேட்டாள் வயதுக்கு மீறிய கேள்வி கேட்கிறாய் என்று தடித்த வார்த்தைகளால் தண்டிக்காமல் அவர்களுக்கு புரிய வையுங்கள்.

  இக்குறும்படம் ஒவ்வொரு பள்ளியிலும் திரையிடவேண்டும். நம் அரசுக்கும் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்க வேண்டும்.

 ’’ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ஆயிஷாதான். அனைத்து மாணவ மானவிகளும் ஆயிஷாக்களாக உருவாகட்டும். ஆயிஷாக்கள்தான் நமக்குத் தேவைபடுகிறார்கள். ஆயிஷாக்கள் பிறக்கட்டும், ஆயிஷாக்கள் உருவாகட்டும்’’.

இப்பொழுதே முடிவு செய்து விட்டேன். எனக்கு பிறக்கப் போகும் பெண்குழந்தைக்கு ’ஆயிஷா’ பெயர் வைக்க வேண்டும் என்று.

இப்படத்தைக் காண:  http://www.youtube.com/watch?v=8-BuyTExd_o

    

Monday, November 26, 2012

இலக்கிய ஆளுமைகள்-1


   தினமணியில்  ஒவ்வொரு ஞாயிறும் ’’தமிழ்மணிப்’’ பகுதி வெளிவருகிறது என்பது தினமணியைத்தொடர்ந்து வாசிக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்கள் நன்கு அறிவர்.அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கிய ஆளுமைகளைப் பற்றி சமகால எழுத்தாளர்கள் எழுதிவந்தனர்.புகழ்ப் பெற்ற எழுத்தாளர்களை நாம் நன்கு அறிவோம்.ஆனால் நாம் அறியாத பல நல்ல எழுத்தாளர்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர் என்பது  இத் தொடரைப் படிக்கும் போதுதான் தெரிந்தது. நல்ல எழுத்தாளர்களை காலம் மறந்துவிட்டது. தினமணி ’’தமிழ்மணி’’ மூலம் நாம் அந்த எழுத்தாளர்களை அறிந்து கொண்டோம்.இப்பொழுதுள்ள தலைமுறையினரும்,வருங்கால தலைமுறையினரும் இந்த எழுத்தாளர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவாரமும் என் வலைப்பூவில் அந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய  தொடர்கட்டுரையை தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்.தொடர்ந்து என் கட்டுரையுடன் இதனையும் நீங்கள் படிக்கலாம்.தினமணிக்கு என் நன்றிகள்.

 இந்த வார ஆளுமை:

"சித்தர் இலக்கியச் செம்மல்' மீ.ப. சோமு

-திருப்பூர் கிருஷ்ணன்


 திருநெல்வேலிப் பகுதியில் பிறந்து இலக்கியத்தைக் கணிசமாக வளர்த்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலர் தமிழில் உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டி.கே.சி., தி.க.சிவசங்கரன் என வளரும் அந்தப் பட்டியலில் அமரர் சோமுவும் இணைகிறார். திருநெல்வேலி சந்திப்பின் அருகிலுள்ள மீனாட்சிபுரம்தான் அவரது சொந்த ஊர். பிறந்த தேதி 17.6.1921.

  சிறுகதை எழுதும் சிலருக்கு நாவல் எழுத வருவதில்லை. நாவல் எழுதுபவர்களிலும் சிலருக்குச் சரித்திர நாவல் எழுத வருவதில்லை. (அதனாலேயே சரித்திர நாவல் இலக்கியமல்ல என்று சொன்ன எழுத்தாளர்களும் தமிழில் உண்டு) மீ.ப.சோமு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, பயண இலக்கியம் என இலக்கியத்தின் பல துறைகளில் முயன்று எழுதி வெற்றிபெற்ற மிகச் சில சாதனையாளர்களுள் ஒருவர்.

  சோமு இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்தவர். தமிழின் பக்தி இலக்கியத்தில், குறிப்பாக சித்தர் பாடல்களில் தோய்ந்த பக்தர் அவர். நெல்லை சுந்தர ஓதுவா மூர்த்திகள் என்ற புகழ்பெற்ற தேவார இசைமணி, திருமதி சோமுவின் பெரியப்பா.

   இளைஞராக இருந்தபோதே எழுத்தார்வம் கொண்டு நிறைய எழுதினார். ஆனால் பரவலாக அவர் அறியப்பட்டது, விகடன் வழங்கிய "பாரதி தங்கப் பதக்கம்' அவரது சிறுகதைக்குக் கிடைத்தபோதுதான்.

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டம் பெற்ற வகையில், முறையாகத் தமிழ் கற்ற தமிழ்ப் பண்டிதரும்கூட. மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன்றோர் வரிசையில் பழந்தமிழ் அறிந்து, தற்கால இலக்கியத்தில் சாதனை படைத்தவர்.

  சம்ஸ்ருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். வெளிதேச இலக்கிய அமைப்புகளில் தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலச் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளின் பெருமை பற்றி "தி டைம்ஸ்' என்ற

 ஆங்கில நாளேடு வியந்து பாராட்டிக் கட்டுரை எழுதியதுண்டு.

  தமிழில் அநாயாசமான சொல் வளத்தோடு தெளிந்த நீரோடைபோல் சொற்பொழிவாற்றக் கூடியவர். அகில இந்திய வானொலியில் பணிபுரிந்ததாலோ என்னவோ, அவரிடம் ஒரு வித்தியாசமான ஆற்றல் இருந்தது. பேசத் தொடங்குவதற்கு முன் அமைப்பாளர்களிடம் எத்தனை நேரம் பேசவேண்டும், அரைமணி நேரமா, இருபத்தைந்து நிமிடமா என்றெல்லாம் விசாரித்துக் கொள்வார். மேடையேறினால் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலே மிகச் சரியாகக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவார். அவரது அந்த ஆற்றல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு.

  "சித்தர் இலக்கியச் செம்மல்' என்று குறிப்பிட வேண்டுமானால் தமிழில் மீ.ப.சோமுவைப் பற்றி மட்டும்தான் அப்படிக் குறிப்பிட முடியும். திருமூலரின் திருமந்திரம் உள்பட ஏராளமான சித்தர் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். சிலப்பதிகாரம் குறித்து ம.பொ.சி. பேசிக் கேட்கவேண்டும் என்று சொல்வதுபோலவே, சித்தர் பாடல் பற்றி மீ.ப.சோமு பேசிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு. அவர் சித்தர் பாடல்களை விளக்கிப் பேசினால், அந்தத் தமிழின் குளுமையைப் பருகவென்றே ஏராளமான கூட்டம் வருவதுண்டு.

   கொஞ்ச காலம் வானொலியில் பணிபுரிந்துகொண்டே கல்கி வார இதழிலும் ஆசிரியராக இருந்தார். (1954 முதல் 1956 வரை). இவர் வானொலியில் வகித்தது, தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர் என்ற பெரிய பதவி.

   கல்லறை மோகினி, திருப்புகழ்ச் சாமியார், கேளாத கானம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். கடல் கண்ட கனவு உள்ளிட்ட பல நாவல்களை எழுதியவர். இவரது "ரவிச்சந்திரிகா' நாவல் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டு, பெரும்புகழ் பெற்ற நாவல். தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் அது வெளிவந்தது.

   தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். அந்த வகையில் இவரது இளவேனில் கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கது. பிள்ளையார் சுழி, நமது செல்வம் முதலிய கட்டுரைத் தொகுதிகளின் ஆசிரியரும்கூட. பற்பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.

   மீ.ப.சோமு, தம் சமகாலத்தில் வாழ்ந்த இருபெரும் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற பெருமைக்குரியவர். ஒருவர் மூதறிஞர் ராஜாஜி. இன்னொருவர் கம்பன் புகழ்பாடும் டி.கே.சி. ராஜாஜியின் கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் அவரது இரவு உணவு சோமு வீட்டில்தான்.

   மீ.ப.சோமு எழுதிய நாடகங்கள் பல பிரபலமானதற்கு, அவரது தமிழால் கவரப்பட்டு டி.கே.எஸ். சகோதரர்கள் அவற்றை மேடை ஏற்றியதும் ஒரு முக்கியக் காரணம்.

   பல பரிசுகள் இவர் எழுத்தாற்றலைத் தேடி வந்தன. இவரது "அக்கரைச் சீமையிலே' என்ற பயண நூலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. படைப்பிலக்கியம் அல்லாத நூலுக்கு அகாதெமி பரிசு கொடுத்ததைப் பற்றி எப்போதும் போல், அப்போதும் சில விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால் ஏ.கே.செட்டியார், மீ.ப.சோமு போன்றோர்தான் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை விமர்சித்தவர்களே கூட மறுக்கவில்லை.

   எம்.ஏ.எம். அறக்கட்டளைப் பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, தமிழக அரசுப் பரிசு, பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் போன்ற பட்டங்கள் என இவரது பெருமைகள் இன்னும் பல.

   சிக்கனம்பாறை ஆசிரமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தர்தான் இவரது குரு. சித்தரிடம் நேர்முகமாக ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றார். உடலில் உள்ள பல மையங்களில் மனத்தை ஒருமுகப்படுத்தி மானசீக பூஜை செய்யும் பயிற்சியும் அவற்றில் ஒன்று. அந்த பூஜையை நாள்தோறும் விடாமல் செய்துவந்தார். அக்காலத்தில் பெரும் பதவிகளில் இருந்த பலர் மீ.ப.சோமுவிடம் மந்திர உபதேசம் பெற்றவர்களும் கூட.

   தம் ஒரே மகளுக்கு தமது நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான பெயரொன்றை வைத்தார் சோமு. சிதம்பர ராஜ நந்தினி என்பது மகளின் பெயர். முதல் வார்த்தை டி.கே.சி.யையும் இரண்டாம் வார்த்தை ராஜாஜியையும் மூன்றாம் வார்த்தை கல்கியையும் ஞாபகப்படுத்துவது. (சோமுவின் புதல்வி ராஜாஜியின் மடியில் வளர்ந்த செல்லக் குழந்தையும் கூட). உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ்.கோமதிநாயகம் மீ.ப.சோமுவின் மாப்பிள்ளை.

   தம் மனைவி காலமானபோது வயோதிகத்தால் தளர்ந்திருந்த சோமு, சற்று விரக்தி அடைந்தார். ஆனாலும், இறுதிக் காலங்களில் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகப் பதவி வகித்துப் பணியாற்றத் தொடங்கினார். "தமிழே என்னை விட்டு என்றும் பிரியாத என் நிரந்தரத் துணை' என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொல்வதுண்டு. 1999-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ஒரு பொங்கல் திருநாளையொட்டி அவர் மறைந்தார். ஆனால், என்றும் மறையாத தமது எழுத்துகளில் அவர் வாழ்கிறார்.

Tuesday, October 30, 2012

தொடர்: நான் படித்த நன்னூல்!






       வாரத்தில் இரண்டு,மூன்று புத்தகங்களையாவது நான் வாசித்து விடுவேன்.நான் வாசித்த புத்தகங்களை ’’நான் படித்த நல்ல நூல்’’ என்னும் தலைப்பில் வாரம் ஒருமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.என் குழந்தைப் பருவம் தொட்டு புத்தகங்கள் எனக்கு நல்ல வழிகாட்டியாக வந்துகொண்டிருக்கிறது.என் குடும்பத்தில் என் அம்மாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது.அதன் காரணமாகக் கூட எனக்கு புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்ப்ட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.நான் மனிதர்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவிற்கு புத்தகங்களையும் நேசிக்கக் கூடியவள்.உங்களுக்குத் தெரியும் தமிழில் புத்தகத்திற்கு ’நூல்’ என்றொரு பெயர் உண்டு.அதற்கு என்ன பொருள் தெரியுமா? இதற்கு தமிழருவிமணியன் ஐயா அவர்களின் விளக்கத்தை கேளுங்கள்: நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த வீட்டிற்கு கதவு,ஜன்னல் பொருத்த தச்சரை நாடுவீர்கள்.அந்த தச்சர் கதவை சரியான நிலைக்கு கொண்டுவரவும் அதன் முண்டுகளையும் தேவை இல்லாத வற்றையும் நீக்க நூலை வைத்துத்தான் சரிசெய்வார்.அதுபோலதான் நண்பர்களே, நம் மன அழுக்குகளை அகற்றி பண்பட்ட மனிதர்களாக உருவாக நூலை வைத்துதான் சரி செய்ய முடியும்.ஆகையால் தான் புத்தகத்திற்கு நூல் என்று தமிழில் பெயருண்டு.இது போல் தமிழைத் தவிர வேறெந்த மொழிகளிலும் புத்தகத்திற்கு நூல் என்று சரியான பொருள் இருப்பதாக நான் அறிந்த வரையில் இல்லை.அதுதான் தமிழின் சிறப்பு.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்ளை நான் வாசித்த நல்ல புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.அவசியம் நீங்கள் இந்த புத்தகங்களை வாசிக்கலாம்.சரி இந்த வாரத்திற்கான புத்தகத்திற்கு வருவோம்.

      என கல்லூரி காலத்தில்தான் திரு.இறையன்பு I.A.S அவர்கள் தொலைக்காட்சியின் வாயிலாக எனக்கு அறிமுகமானார்.அவருடைய நேர்மையும்,எளிமையும்தான் என்னை மிகவும் கவர்ந்தன.பிறகு அவரின் ’ஆத்தங்கரையோரம்’ என்னும் புத்தகத்தை வாசித்தேன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவருடைய ’உன்னோடு ஒரு நிமிஷம்’ என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தைப் படித்தேன்.இந்த புத்தகம்‘சுட்டி விகடன்’ இதழில் ஒரு பக்கத்திற்கு ஒவ்வொரு இதழிலும் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.இன்றைய குழந்தைகளுடைய வாழ்க்கையில் தென்படாத சில கூறுகளை நம்முடைய வாழ்க்கையிலிருந்து தொடங்கி பகிர்ந்து கொள்வது போல் எழுதப்பட்ட நூல்.அழகான படங்களோடு வெளிவந்த நூல்.

   நான் சுட்டி விகடனில் தொடராக வாசித்தபோதே முடிவு செய்துவிட்டேன்.இது புத்தகமாக வந்தப் பிறகு அவசியம் வாங்கியாக வேண்டும் என்று.இது குழந்தைகளுக்கானப் புத்தகம் என்றாலும் தம் பிள்ளைகளின் எதிகாலம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டும்.தம் குழந்தைகளை அதிகம் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமே ஒழிய நல்ல பண்புள்ளவர்களாக வரவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் திரு.இறையன்பு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம் குழந்தைகளின் சின்னச்சின்ன ஒழுக்கப் பண்புகளைப் பற்றிப் பேசுகிறார்.இந்த நூல் உருவானதைப்பற்றி திரு.இறையன்பு அவர்களே இதோ இப்படிச் சொல்கிறார்:

 
  ’’சுட்டி விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பு வந்தபோது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய எழுதியும் பேசியும் இருக்கிறேன் என்றாலும்,குழந்தைகளுக்காக எழுதுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.நாமே குழந்தைப் பருவத்துக்குப் பயணப்பட சம்மதிக்கும் போதுதான் அதைச் செவ்வனே செய்யமுடியும் என்பதை நான் உணர்வேன்.அவர்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டு உரையாடுவதைப் போல பகிர்ந்து கொள்வதுதான் எழுதும் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும்.அந்த வகையில் ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’என்கிற தொடர் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு இதழிலும் ஒரே ஒரு செய்தியை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.சின்ன வயதில் நான் எவற்றையெல்லாம் செய்வேன் என்பதைக் காட்சிப்படுத்திப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் இந்தத் தொடர் தொடர்ந்தது.’’

    ஆகவே நண்பர்களே எவ்வளவுதான் நான் இந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் நீங்கள் இப்புத்தகத்தை  வாசிக்கும் போதுதான் உள் வாங்கிக் கொள்ள முடியும்.நல்ல குழந்தைகளை உருவாக்குவது நல்ல குடிமகன்களை உருவாக்குவதாகும்.நாளைய நல்ல குடிமகன்களுக்கு இந்த பூரணி எமிலியின் வாழ்த்துக்கள்!

                     முதல் பதிப்பு:  பிப்ரவரி 2010

                      பதிப்பகம்      : விகடன் பிரசுரம்

                      விலை           : 90


                                                                                 தொடர்ந்து வாசிப்போம்...

Saturday, October 27, 2012

தமிழ் குடில் பிறந்த கதை



       இதோ இன்று புதிதாக ஒரு எழுத்தாளினி பிறந்திருக்கிறாள்.என்னை நான் எழுத்தாளினி என்று சொல்வதைவிட நல்ல வாசகி என்றே அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.காரணம் என் மரணம் நிகழ்கிற வரையில் படித்துக்கொண்டிருக்கவே ஆசை. இந்த வலைப்பூ தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் எதுவும் எழுத முடியாத சூழல். இப்பொழுதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது.இனிமேல் தொடர்ந்து எழுதிவிட வேண்டும். 

      முதல் பதிவாக இந்த வலைப்பூவின் பெயர் காரணத்தைச் சொல்லவிரும்புகிறேன்.’’தமிழ் குடில்’’ என்பது வெறும் வலைப்பூவுக்கான  பெயர் மட்டுமல்ல இது ஒரு அமைப்பு.ஒரு வீடு என்றால் அதில் பல அறைகள் அடங்கியுள்ளன. அதாவது சமையலறை, குளியலறை, பூஜை அறை இருப்பது போல். இந்த ’’தமிழ் குடில்’’ கீழும்  பல பிரிவுகள் அடங்கியுள்ளன.அதாவது ’வயல் இலக்கிய பூங்கா’,’நன்றும் தீதும்’வீதி நாடக அமைப்பு,’பெரியார் படிப்பகம்’என்ற பல்வேறு அமைப்புகள் இந்த ''தமிழ் குடில்’’கீழ் செயல்பட உள்ளன. இந்த அமைப்பு முழுமையும் தமிழ் இலக்கிய ஆர்வம் உடைய நண்பர்களைக் கொண்டே செயல்பட இருக்கின்றன. 



   இதில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளின் பெயர்கள் அனைத்தும் காரணப்பெயர்தான்.’வயல் இலக்கியப் பூங்கா’என்பது எங்கள் கிராமம் வயல் சார்ந்து அமைந்திருப்பதால் இப்பெயர் சூட்டியுள்ளோம்.ஒவ்வொரு மாதமும் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு கிராமத்து மக்களுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.கிராமத்தில் உள்ள வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள அவ்வளவாக அறியப்படாத கிராமத்து எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டி அங்கீகரிக்க வேண்டும்.இப்படியாக இன்னும் சில திட்டங்கள் உள்ளன.முக்கியமாக இந்த அமைப்பு பசுமை நிறைந்த வயல்களின் நடுவேதான் கூடி களையும்.


    அடுத்தது ’’நன்றும் தீதும்’’ என்னும் வீதி நாடக அமைப்பு. இந்த நாடக அமைப்பானது ஒவ்வொரு வாரமும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நல்ல நாடக ரசனை கொண்ட நண்பர்கள் மூலம் நடத்தப்படும்.நம்மைச் சுற்றி பல நன்மைகளும் தீமைகளும் அடங்கியுள்ளன.ஆகையால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நாடக அமைப்பானது சமுதாயத்தில் நிலவும் இன்றைய முக்கியப் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வியிப்புணர்வு ஏற்படுத்துவது,விளிம்பு நிலை மக்களுக்கு  கல்வி குறித்த வியிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இப்படியாக இந்நாடக அமைப்பு அமைய உள்ளது.


    இங்கு ’’பெரியார் படிப்பகம்’’ பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். காரணம் இது மற்ற நூலகம் போல் அல்லாமல் பல புதுமைகளைத்தாங்கி கிராமத்தில் அமையும் நூலகம்.இது மற்ற நூலகங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும் என்பதில் ஐயம்மில்லை.காரணம் இந்த படிப்பகத்தின் நோக்கம் கிராமத்தில் இருக்கும் படிக்காத முதியோர்களை(தாத்தா, பாட்டிகள்)மனதில் வைத்தே உருவாக்க எண்ணியுள்ளோம்.அதன்படி விவசாய வேளை முடிந்ததும் மற்றும் விவசாயம் இல்லாத காலங்களில் வெறுமனே பொழுதைக் கழிக்க விடாமல் இந்த பெரியார் படிப்பகத்திற்கு ஒன்றுகூட்டி அவர்களுக்காக நிறைய தமிழறிஞர்களின் பேச்சுக்கள் அதாவது சொற்பொழிவுகள்,ஆடியோ புத்தகங்கள் போட்டு கேட்க வைப்பதே முக்கிய நோக்கமாகும்.இதன் மூலம் பல நல்ல நன்மைகள் நடந்திடும் என்பதில் உறுதியாக உள்ளோம்.காரணம் முதியோர்கள் தங்களின் கடைசி காலம் பயனுள்ள வகையில் கழிக்கவும்,ஒரு வெறுமை தெரிந்திடாமல் இருக்கவுமே இந்த நூலகத்தின் விருப்பம்.


    இந்த படிப்பகம் நல்ல அற்புதமான இயற்கை சூழலில் அமையுமாறு முடிவு செய்துள்ளோம்.இங்கு வரும் அனைவரையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதே இந்நூலகத்தின் நோக்கம். இப்பொழுது நான் எவ்வளவு சொன்னாலும் எங்களுடைய நூலகத்தின் கனவை விவரித்திடமுடியாது.அது அமைந்தப் பிறகுதான் இதனுடைய அருமை புரிய ஆரம்பிக்கும்.எந்தளவிற்கு சிறப்புடன் அமைய முடியுமோ அவ்வளவு முயற்சி எடுத்து அமைக்க திட்டமிட்டுள்ளோம்.



   இத்துடன் நின்று விடவில்லை எங்களின் அமைப்பு.நம் கிராமத்து விளையாட்டுக்களை மீட்டெடுக்க வேண்டும்.தமிழர்களின் பண்டிகையாகிய பொங்கல் அன்று நான்கு நாட்களும் நம் கிராமத்து விளையாட்டு சார்ந்த போட்டிகள் நடத்துவது,விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்து வியிப்புணர்வு ஏற்படுத்துவது,கிராமத்து மாணவர்களை ஆங்கில புலமையுடன் உருவாக்குவது,போட்டித்தேர்வுகளை எப்படி எதிர் கொள்வது என்று இப்படியாக கிராமத்து மாணர்களை பல்வேறு திறமைகளுடனும் நல்ல ஆளுமைகளுடனும் உருவாக்குவதே எங்களின் முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளோம்.


     இப்படி நாங்கள்‘’தமிழ் குடில்’’மூலம் எங்களின் சமுதாயப் பணி தொடங்க முடிவு செய்துள்ளோம்.இது ஒரு கனவு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறிய தொடக்கம்தான்.நாங்கள் இப்படியான ஒரு கிராமத்தில் வாழவே ஆசைப்படுகிறோம்.