இன்று ஆயிஷா என்னும் அற்புதமான குறும்படம் பார்த்தேன்.ஆனால் இது குறும்பட விமர்சனம் அல்ல. நான் அதிகமாக படங்களையும் பார்ப்பவள் அல்ல.அதுமட்டுமில்லாமல் திரைவிமர்சனம் மட்டும் என் வலைப்பூவில் எழுதி என் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற முடிவிலும் இருக்கிறேன். அதற்காக நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன.ஆனால் இந்த படம் பார்த்தப் பிறகு என் மனதில் தோன்றியதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆகையால் இதை குறும்பட விமர்சனமாக நினைக்காமல் என் மனதில் தோன்றிய வலிகளையும், ஆதகங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதாக நினையுங்கள்.
’’ஆயிஷா’’ சில வருடங்களுக்கு முன்னால் நான் புத்தகமாகப் படித்து தூக்கத்தைத் துளைத்ததுண்டு. இரா.நடராசன் அவர்கள் எழுதிய குறுநாவல். மீண்டும் இப்பொழுது குறும்படமாக பார்த்தப் பிறகு என் வேதனையையும் ஆதங்கத்தையும் அடக்க முடியவில்லை. யார் மீது வேதனை? யவர் மீது ஆதங்கம் என்று கேட்கிறீர்களா? எல்லாம் நமது இந்தியக் கல்வித்துறையின் மீதுதான். ஆங்கிலேயர்கள் நம்மை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதர்க்காகவும் முட்டால்களாக இருக்கச்செய்யவுமே மெக்காலே என்பவரால் கொண்டுவரப்பட்ட கல்விமுறைதான் இப்பொழுது இருக்கும் நம் கல்விமுறை. ஆங்கிலேயர்கள் சென்று அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நாம் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் 2020-ல் வல்லரசு, அடுத்த சூப்பர் பவர் என்று கூப்பாடு போடுகிறது நம் அரசு.
இந்த குறும்படம் ’ஆயிஷா’ என்னும் ஏழாம் வகுப்பு மாணவி மூலம் நம் கல்வி அமைப்பைச்(Educational System) சாடுகிறது. எனக்குத்தெரிந்து ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஆயிஷாதான். நமது கல்விமுறையும் ஆசிரியர்களுமே ஆயிஷா உருவாவதை தடுக்கிறார்கள். எந்தக்குழந்தை(மாணவர்கள்) கேள்விகேட்டாலும் அக்குழந்தையை ஊக்கப்படுத்தி (குறைந்த பட்சம் பதிலாவது சொல்லலாம்)ஆராச்சியில் ஈடுபடமளவுக்கு தூண்டவேண்டும். ஆனால் பாவம் இங்கு என்ன செய்வது ஆசிரியர்களுக்கே விடை தெரிவதில்லை. இதில் எங்கே ஆராய்ச்சி? நம் படத்தின் நாயகி ஆயிஷா ஆசிரியர்களை கேள்விமேல் கேள்வி கேட்கிறாள். அவள் அறிவுப்பசியில் ஆசிரியர்களே அறியாத(அறிந்துக் கொள்ள விருப்பமில்லாத)ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கிறாள். இப்புத்தகங்கள் ஏன் தமிழில் இல்லை என்று வேதனைப்படுகிறார்கள். நீங்களே(ஆசிரியர்களே)ஏன் தமிழில் எழுதக்கூடாது? என் போன்ற மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று பாரதி சொன்னானே ’’பிறமொழியில் உள்ள நல்ல புத்தகங்களையெல்லாம் தமிழில் படைத்திட வேண்டும்’’ என்று அதை இங்கு நமக்கு நினைவூட்டுகிறாள்.அவளின் அறிவுத் தேடுதல் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. அவள் ஆசிரியர் அடித்தாள் வலி தெரியாமல் இருக்க ஏதாவது மருந்து இருக்கிறதா என்னும் போது நம் கண்களில் கண்ணீர் வரவைப்பதோடுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்துகிறாள்.
இந்தக் குறும்படம் இத்துடன் நின்று விடவில்லை. ம்ற்றுமொரு உண்மையையும் சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது நம் கிராமத்தில் இன்னும் இருக்கும் வழக்கம். பெண்பிள்ளையை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும். அவள் இன்னோர் வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே. அவள் அடுப்படிக்கும், கணவனுக்கு பணிவிடை செய்யவும் பிறந்தவள்தானே, பிறகு இவளை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்னும் கிராமத்துப் பெற்றோர்களின் மனோநிலையை அல்லது அறியாமையை விளக்குகிறது. ’ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கே பயன்’ என்னும் உண்மையை ஏன் நம் பெற்றோகள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்னும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.
இங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும். ’ஆசிரியர் என்பது அறப்பணி,அதற்கே உன்னை அற்பணி’ என்பது மூத்தோர் சொல்’. அதுமட்டுமில்லாமல் ’எழுத்து அறிவித்தவன் இறைவன் என்று சொவார்கள்’. அந்த அளவிற்கு ஆசிரியர்களை கடவுளாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால் ஆசிரியர்கள் வேலைக்கு வந்த உடன் படிப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்(ஒரு சில ஆசிரியர்களைத் தவிர). ஆசிரியர்கள் இதை ஒரு வேலையாகத்தான் பார்க்கிறார்கள். இதை தவமாகப் பார்ப்பதில்லை. தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிரும்புவதில்லை. ஓர் ஆசிரியர் என்பவர் அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச அறிவுடனாவது இருக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விடுகிறார்கள். நான் அறிவியல் ஆசிரியர்தானே பிறகு நான் ஏன் கணிதம் கற்கவேண்டும்?,நான் ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். இவர்கள் மாணவர்களை விட படிப்பதற்கு சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பிறகு இவர்கள் போய் எங்கு ஆசிரியர் பணியை அறப்பணியாக நினைக்கப் போகிறார்கள்.
இப்பொழுது தமிழக அரசு கொண்டுவந்துள்ள ’ஆசிரியர் தகுதித்தேர்வு திட்டம்’ பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.அப்பொழுது புரியும் ஆசிரியர்களின் நிலமை.
மீண்டும் இக்குறும் படத்திற்கு வருவோம். இப்படத்தில் ஒளிப்பதிவு சரியாக அமையவில்லை. அதாவது முழுவதும் இரவில் படபிடிப்பு நடந்தது போலவே தெரிகிறது. மற்றபடி சிறு தொய்வு கூட இல்லை. இயல்பாக இருக்கிறது. ஆசிரியையும், ஆயிஷாவும் மிகச் சிறப்பாகவே நடித்துள்ளனர். அற்புதமான இயக்கம். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரா.நடராசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
அனைவரும் குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவசியம் இக்குறும்படத்தைப் பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் பார்க்க வையுங்கள். இனிமேலாவது குழந்தைகளை மதிப்பெண்களுக்காக படிக்க வைக்காமல் விஷயத்தைத் தெரிந்துக்கொள்வதற்காக படிக்க வையுங்கள். பாடபுத்தகத்தை தாண்டியும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். குழந்தைகள் கேள்விகள் கேட்டாள் வயதுக்கு மீறிய கேள்வி கேட்கிறாய் என்று தடித்த வார்த்தைகளால் தண்டிக்காமல் அவர்களுக்கு புரிய வையுங்கள்.
இக்குறும்படம் ஒவ்வொரு பள்ளியிலும் திரையிடவேண்டும். நம் அரசுக்கும் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்க வேண்டும்.
’’ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ஆயிஷாதான். அனைத்து மாணவ மானவிகளும் ஆயிஷாக்களாக உருவாகட்டும். ஆயிஷாக்கள்தான் நமக்குத் தேவைபடுகிறார்கள். ஆயிஷாக்கள் பிறக்கட்டும், ஆயிஷாக்கள் உருவாகட்டும்’’.
இப்பொழுதே முடிவு செய்து விட்டேன். எனக்கு பிறக்கப் போகும் பெண்குழந்தைக்கு ’ஆயிஷா’ பெயர் வைக்க வேண்டும் என்று.
இப்படத்தைக் காண: http://www.youtube.com/watch?v=8-BuyTExd_o