Friday, December 7, 2012

கிராமங்களை நோக்கி திரும்புவோம்...




   இக்கட்டுரைக்குள் நுழைவதற்குமுன் முதலில் விவசாயத்திற்கும் எனக்குமான தொடர்பை நான் உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். நான் முழு நேரம் விவசாயம் பார்ப்பவள் இல்லையென்றாலும் என் பாட்டி வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடத்தவறியதில்லை. அங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஓரளவு அறிந்தவள். இப்பொழுதும் எங்களுக்குள்ள எட்டு ஏக்கர் நிலத்தில் அவ்வப்போது நான் பகுதி நேர விவசாயம் செய்து வருகிறேன். தொடர்ந்து விவசாயம் தொடர்பான புத்தகங்களைப் படித்து வருகிறேன். அத்துடன் இல்லாமல் என் விவசாயம் சார்ந்த  நண்பர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூறிய கருத்துக்களையும் இதில் எழுதி உள்ளேன். அதே போல் விவசாயம் எப்படி இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்தால் விவசாயத்தின் மூலம் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு வருகிறேன். என்னுடைய நோக்கம் அனைத்து கிராமங்களையும் சுயசார்புடைய கிராமங்களாக உருவாக்க வேண்டும்.அதாவது நகரத்தை நோக்கி ஓடாமல் நம் கிராமத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நகரத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு கிராமமும் பெறவேண்டும். நல்ல பசுமையான கிராமத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் முழு நேர விவசாயத்தில் ஈடுபடவும் இருக்கிறேன். ஆகையால் நான் ஏதோ போகிறபோக்கில் இக்கட்டுரை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.


    இனி கட்டுரைக்குள் செல்வோம்.இது விவசாய நாடு,இந்தியா கிராமத்தில் வாழ்கிறது,கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள் என்ற பழைய பல்லவியே நானும் பாட விரும்பவில்லை. மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பைக் கண்டு பிடித்து சமைத்து உண்ணத் தொடங்கியதிலிருந்து இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது விவசாயம்தான்.முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவள் ஒரு பெண்தான்.ஆம்  முதலில் ஆணும் பெண்ணும் உணவுக்காக வேட்டையாட இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒரு கட்டத்தில் ஆண் மட்டும் வேட்டையாட கிளம்பினான்.பிறகு தனிமையில் இருந்த பெண் சும்மா இருக்க பிடிக்காமல் விதை போல் இருந்த ஒன்றை பூமியில் ஊன்றிவைத்தால்,ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அது விளைந்து நின்றது.இப்படித்தான் விவசாயத்தை பெண் நமக்கு அறிமுகப்படுத்தினால். பிறகு மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தது எல்லாமே ஆத்தங்கரை ஓரத்தில்தான்.காரணம் பயிர் செய்வதற்கு ஏதுவான நீரும் நல்ல மண்வளமும்  இங்கு அமைந்ததால். ஆகையால் நகரங்கள் ஆற்றங்கரையோரமே அமைந்தன. இப்படி மனித சமுதாயம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கு காரணமே விவசாயம்தான்.

  ஆனால் இன்று இந்த விவசாயமும் விவசாயிகளின் நிலையும் எந்த அவலட்சனத்தில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. இந்த தேசத்தில்தான் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு  தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்கம் காலங்காலமாக உழைத்துக்கொண்டும் முதலாளி வர்கம் பாடுபடாமல் சொகுசான மகிழுந்தில் பயனித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.நான் இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கம்யூனிசம் பேச வரவில்லை.ஆனால் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகள் வேண்டும் என்றே கேட்கின்றேன்.

    தேசத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இன்றைய ஊடகங்கள் கொஞ்சம் கூட ஊடக தர்மம் இல்லாமல் செயல் படுகின்றன.’’எழுத்தும் தெய்வம்,எழுதுகோல் தெயவம்’’ என்றானே மகாக்கவி பாரதி அதை மறந்து ஊடகங்கள் செயல்படும் விதம் மிகக் கேவலமாக உள்ளது.சினிமாவையும் கிரிகெட் போன்ற கேளிக்கையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் நூற்றிருபது கோடிப்பேருக்கு சோறுபோடும் விவசாயிகளைப் பற்றி கொஞ்சளவேனும்  எழுதுகிறார்களா?பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை அனைத்து மீடியாக்களும் போக்கஸ் செய்து கொண்டிருந்த அதேவேலையில் ,அதற்கு பக்கத்திலேயே விதர்பா பகுதியில் விவசாயத்தற்கொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதை ஒரு ஊடகமும் கண்டுக்கொள்ளவில்லை. அந்த அவல நிலை குறித்து ஒரு ஊடகமும் எழுதவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் பெட்டி செய்தியாக போட்டுவிட்டு போகிறார்கள். ‘விவசாயம் நிறைந்த ஒரு நாட்டில் வறுமை சூழ்ந்த ஒரு நாட்டில் சினிமாவும்,கிரிக்கெட்டும் தேவையா (இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா)’என்று நான் கேட்கவில்லை,உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி, இப்போதைய Press Council of India Chairman உயர்திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள் கேட்கிறார்.மீடியா சீர்திருத்தம் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.

 
    தமிழனின் உழைப்பை பறைசாற்றும் உழவர்திரு நாளாம் பொங்கல் நாளன்றுகூட நம் வீட்டு டி.வி பெட்டியிலும் செய்திதாள்களிலும் சினிமாகாரர்கள்தானே ஆக்கிரமிக்கிரார்கள்.அனுஷ்காவின் அன்றாட நாட்குறிப்பு தொடங்கி இந்த பொங்கலுக்காவது ரஜினி படம் வருமா வராதா?என்று சினிமாகாரர்களை போட்டுபோட்டே நம்மை சிந்திக்க வைக்கவிடுவதில்லை இந்த தொலைக்காட்சியும் பத்திரிக்கைகளும். நம் விவசாயிகளின் தினத்தில் ஏன் இவர்கள் வந்து நம்மை ஆக்கிரமிப்பது. இந்த தினத்தில்  ஒரு விவசாயியையாவது அழைத்து வந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கூட தோன்ற வில்லையா நம் ஊடகங்களுக்கு.இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே விவசாய சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. பொதிகை கொஞ்சம் பங்கு கொள்கிறது.

  இங்கு இருபத்தி நான்குமணி நேரத்திற்கும் காமெடிக்கு என்று பல சேனல்கள், பாடல்களுக்கு என்று பல சேனல்கள், விளையாட்டுக்கு என்று பல சேனல்கள். ஆனால் எழுபது சதவீதம் பேர் வேலை செய்யும் விவசாயத்திற்கென்று ஒரு சேனல்கள் உண்டா? ஏன் இந்த அவலநிலை? இந்த தேசம் சரியான பாதையில் பயணிக்கின்றதா?

 ஊடகம்தான் இப்படி என்றால் நம்மால் நமக்காக தேர்ந்தெடுத்த அரசும் அரசியல் வாதிகளும் ஊடகங்களைவிட மோசமாக செயல்படுகிறார்கள்.விவசாயமே துளிகூட தெரிந்திடாத கொஞ்சம் கூட வியர்வை சிந்தி உழைக்காத ஒருவர்தான் இங்கு விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் அவல நிலை.இவர் எப்படி நமக்கு ஏற்ற சட்டங்கள் போடுவார்?விவசாயிகளின் பிரச்சனை இவருக்கு எப்படி தெரியும்?இதுவரை ஒரு விவசாயி கூட ஒரு ராஜசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கவில்லை.அதற்குள் சச்சின் இடம் பிடித்துவிட்டாரே. இப்பொழுது அவருக்கு பாரத ரத்னா கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசியல் நடந்து கொண்டிருக்க நம் இளைஞர்கள் சிலர் இதற்கு வக்காலத்து வாங்குவது மிகப்பெரிய கொடுமை.

இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் டாஸ்மாக், சினிமா, கிரிகெட் என்று இந்த வட்டத்திற்குள்ளே சுழலுகின்றனர்.கேட்டால் தினமும் உழைக்கின்றோம் ஒருநாள் ஓய்வு என்கிறார்கள். நான் இவர்களைப்பார்த்து தெரிந்தே ஒரு கேள்வி கேட்கிறேன்.நீங்கள் வாழும் இதே சமூகத்தில்தானே  சினிமாவே கண்டிராத எத்தனையோ பேர் இன்னும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேலை உணவில்லாமல் பசியால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கேளிக்கைகள் தேவைப்படலாம்.ஆனால் பட்டினிச்சாவு நடந்து கொண்டிருக்கும் நம் சமுகத்திற்கு தேவையானதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

   இப்படியாக எங்கெங்கு காணினும் விவசாயி நசுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறான்.விவசாய குடும்பத்திலிருந்து வந்த நம் வீட்டு படித்த இளைஞர்கள் நகரத்தில் தகுதிக்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த பொறியியல் படித்த எத்தனையோ இளைஞர்கள் பத்தாம் வகுப்பு படித்து செய்யக் கூடிய ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்ள்.அப்படியென்றால் விவசாயக் குடும்பத்திலிருந்து பொறியியயல் படித்துவிட்டு நம் இளைஞர்கள்/இளைஞிகள் தனியார் நிறுவனத்திற்கு சென்று வேலை பார்க்கக் கூடாதா?அப்படியென்றால் அவர்கள் பெற்றோர்கள் செய்த விவசாயத்தையே இவர்களும் செய்ய வேண்டுமா? இது குலத்தொழில் போலல்லவா இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

  இவ்வளவு அவலநிலைகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்துகொண்டிருக்கும் நம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மிகக கொடுமையானது.முதலில் சரியான மின்சாரம் இல்லை, விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை,அதையும் மீறி இராப்பகல் பாரமல் பயிர்செய்து உற்பத்தி செய்துகொண்டு போனால் நியாயமான விலைக்கு கேட்பதில்லை.இது போன்ற இல்லைகளே அதிகம்.

  சரி அனைவரும் புறந்தள்ளும் விவசாயத்தில், இவ்வளவு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள விவசாயத்தில் எப்படிதான் லாபகரமான விவசாயியாக உருவெடுப்பது? இதற்கு நம் இளைஞர்கள்/இளைஞிகள் என்ன செய்ய வேண்டும்? சுயசார்புடைய கிராமங்களை உருவாக்குவது எப்படி?

தொடரும்...

Tuesday, December 4, 2012

தொடர் : இலக்கிய ஆளுமைகள்-2

தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'

-மு.பரமசிவம்



  மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 ÷கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 ÷தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 ÷÷பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 ÷உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 ÷நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ÷""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 ÷1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 ÷இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 ÷"பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ÷ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 ÷புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 ÷2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!

  தினமணி ’தமிழ்மணியில்’ வெளிவந்த பல்வேறு இலக்கிய ஆளுமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் என்னால் தொகுக்கப்படும் கட்டுரையாகும்.

முதல் கட்டுரையைப் படிக்க :  இலக்கிய ஆளுமைகள்-1